economics

img

இந்தியாவில் உப்பு உற்பத்தி 30% சரிவு...

இந்தியாவில் நடப்பாண்டு உப்பு உற்பத்தி 30 சதவிகிதம் குறையும் என வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பொதுவாக குஜராத்தில் உள்ள உப்பளங்களில் மார்ச் மாதம் அறுவடை காலமாக இருக்கும். ஆனால் ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதிக்கு பிறகுதான் உப்பு அறுவடை காலம் தொடங்கியுள்ளது. மேலும் அக்டோபர் மாதம் தொடங்க வேண்டிய உப்பளங்களின் உற்பத்தி, பருவ மழை காரணமாக டிசம்பர் மாதமே தொடங்கியது. எனவே இந்தியாவில் உற்பத்தியாகும் உப்பின் அளவு 30 சதவிகிதம் சரிந்துள்ளது. இதனால் இந்தியாவின் உப்பின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

ஏற்கனவே நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரித்து வரும் நிலையில், உப்பின் விலையும் அதிகரித்தால் என்ன ஆகும் என சுதாரித்துக்கொண்ட ஒன்றிய அரசு ஏற்றுமதியை தடை செய்வது அல்லது குறைப்பது குறித்து விவாதித்து வருவதாக கூறுகின்றன. 

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 30 மில்லியன் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் 10 மில்லியன் டன் உப்பு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 12.5 மில்லியன் டன் உப்பை தொழிற்சாலைகள் பயன்படுத்துகின்றன. மீதம் உள்ள உப்பு தான் ரீடெயில் சந்தைக்கு வருகிறது. 

இந்தியாவை விட அமெரிக்கா, சீனா இரண்டும் உப்பு ஏற்றுமதியை அதிகம் செய்யும் நாடுகளாக உள்ளன. இந்த மூன்று நாடுகள் மட்டும் 55 நாடுகளுக்கு உப்பை ஏற்றுமதி செய்கின்றன. இந்தியாவின் ஒட்டுமொத்த உப்பு உற்பத்தியில் 90 சதவிகிதம் குஜராத்தில் இருந்துதான் நடைபெறுகிறது. மீதமுள்ள 10 சதவிகித ராஜஸ்தான், தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கிடைக்கிறது. 

தமிழ்நாட்டில் தூத்துக்குடி, காஞ்சிபுரம், ராமநாதபுரம், கடலூர் மாவட்டங்களில் அதிகளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. தூத்துக்குடியில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு உப்பு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு சாரசரியாக ஆண்டுக்கு 3 லட்சம் டன் உப்பு ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த ஏற்றுமதி படிப்படியாக குறைந்து உள்ளது. கடந்த நிதியாண்டில் 1.56 ஆயிரம் டன் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 

உலகின் நீண்ட கடற்கரை பகுதியை கொண்ட தமிழ்நாட்டில் உப்பு உற்பத்தி குறைவாக இருப்பதற்கு காரணம், குஜராத்தில் உள்ளது போல தொழில்நுட்பங்கள் இல்லாததே எனவும், அதற்கு ஏற்றவாறு நாம் மாற வேண்டும் எனவும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.  

இந்தியாவில் உப்பு முதலில் பாறைகளில் இருந்து எடுக்கப்பட்டது. எனவே உப்பு தயாரிக்கும் தொழில் சுரங்கத் தொழிலாகதான் இன்று வரை கருதப்பட்டு வருகிறது. அதை விவசாயத் தொழிலாக அறிவிக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது. விவசாயத் தொழிலாக இது அறிவிக்கப்பட்டால், இத்தொழிலுக்கு மேலும் சலுகைகள் அதிகரித்து உப்பின் விலை குறையும், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த முடியும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

;